Welcome, Guest   [ Register | Sign In | Take a tour | Adult Filter: On ]

நேருவின் இதயம் வேண்டும்... எப்போதும்!

பள்ளிப் படிப்பிற்குப் பிறகு மரத்துப் போகத் தொடங்கும் நமது மனம் (யோசனை) மேலும் வளர வளர, கல்வி, தேர்வு என்றாகி பிறகு வேலை, சம்பளம், அதன்பிறகு பணி உயர்வு, பதவி உயர்வு என்று பொருளாதார எண்ணங்களால் பீடித்து மேலும் மரத்துப் போய், வாழ்வின் அற்புதமான அன்றாட நிகழ்வுகளையெல்லாம் சுகிக்க மறந்த மரக்கட்டையாகி விடுகிறது.

இந்த மரத்துப் போன மனதினால் நாம் இழப்பது, நமது பிள்ளைகளுடன் மனம் விட்டுக் கொஞ்சும் அந்த ஒரு அற்புத சுகம். நமது குழந்தைகள் இழப்பது தந்தையிடமிருந்து பெறக்கூடிய முரட்டு அன்பாடல். தாயிடமிருந்து குழந்தைக்கு உரியதெல்லாம் தவறாமல் கிடைத்து விடுகிறது, ஆனால் நமது அன்றாட பொருளாதார வாழ்வின் அலைக்கழிப்பால் தந்தையின் அன்புப் பங்கு அவன் பிள்ளைகளுக்கு கிடைக்காமலேயே போய் விடுகிறது.

அன்றும் அப்படித்தான்... அலுவலகத்தில் இருந்து திரும்பிய எனக்கு, நான் செய்த ஒரு வேலைத் தொடர்பான சிந்தனை ஆக்கிரமித்த நிலையில், வீட்டிற்கு வந்து காலனியை (காலனி நிலையில்தான் நானே இருந்தேன்) கழட்டிக்கொண்டிருந்தேன்.

ஆங்கா...ன் என்ற அன்பழைப்பு. காதில் விழுந்தது, ம்.. என்றேன்.

கழட்டிய காலனியை அதன் இடத்தில் வைத்துவிட்டு உள்ளே செல்கிறேன். ஆங்கான்... ஆங்கான்... இத கேளன்.. மீண்டும் ஒரு ம்.. என்ற கூறிகொண்டு நடக்கிறேன்.

எனது அறைக்கு வந்து ஆடையைக் கழற்றிக் கொண்டிருந்தபோதும்... அவளின் வற்புறுத்தல் தொடர்கிறது. ஆடையை கழற்றியதும், உடலைத் தீண்டிய காற்றின் சில்லிப்பில் சற்றே அந்த சிந்தனையிலிருந்து விடுபட்டவனாய்... ஆ.. சொல்லு.. சொல்லு என்றேன்.

என்னிடம் பேசத் துவங்கினாள் எனது தம்பியின் குழந்தை செளபர்ணிகா. 15 நிமிடம் ஒரே பேச்சுதான். உபசரித்துக்கொண்டே வந்த என் மனைவியும் அவளோடு சேர்ந்துகொள்ள... ஒரு சிறிய இன்ப உலகு அங்கு உருவானது.

அதன் பிறகு இரவு 12 மணி வரை (அவள் தூங்குவதற்கு 2 அல்லது 3 மணியாகும்) உரையாடல், சிரிப்பு, என் பெண்ணோடு மோதல் எல்லாம் நடந்தது.

ஓ.கே. ஆங்கான் (அப்படித்தான் என்னை அழைப்பாள்... வீட்டிலிருப்பவர்கள் பெரியப்பா என்று கூப்பிடு என்று மாற்றப் பார்த்தார்கள், நான் வலிந்து மறுத்தவிட்டேன். இன்றுவரை அதே அழைப்புதான்) குட் நைட்... என்பாள். அவள் அறையை விட்டுச் சென்றதும் மழை விட்டதுபோல் இருக்கும். அவள் விட்டுச் சென்ற அன்பு உலகில் அப்படியே தூங்கி விடுவோம்.
அந்த நாளை ஒரு அற்புத சுகத்தோடு முடித்து வைக்கும் வித்தையை இறைவன் குழந்தைகளுக்கு (மட்டுமே) அளித்துள்ளான்.

அவள் எம்மைத் தூங்க வைத்தாள்.

இந்த குழந்தைகள் உலகத்தை முழுமையாக அனுபவிக்க மறந்த, மரத்த என்னைப் போன்ற எத்தனையோ தந்தைகள் இன்றும் உள்ளனர். வேலைப் பளு, கூடுதல் பொறுப்பு (காவல் துறையினருக்கு இந்த நிலை மிக அதிகம்), பணியோடு படிப்பு, சம்பாதனை வேகம், குடியெனும் பழக்க நோய் என்று தந்தைக்காகவே காத்திருக்கும் குழந்தை உலகை இழந்த, இழந்துக் கொண்டிருக்கின்றவர்கள் ஏராளம்.

எத்தனையோ முறை அவளுக்கும் எனக்கும் சண்டை வந்துவிடும், அடித்து விடுவேன். அழுது கொண்டே போய்விடுவாள். அடித்த எனக்கு பிறகு அவளைப் பார்க்கும் முகம் (குற்ற நெஞ்சல்லவா?) இருக்காது. ஆனால் செளபர்ணிகா... சிறிது நேரத்திலேயே... ஆங்கா...ண் என்றழைப்பாள், அதைக்கேட்டு (மனதிற்குள்) வெட்கி குமுறிவிடுவேன். அவளோடு பழக அவள் மனம் வேண்டும்.

வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்பர். யாரிடம் அப்படி வாய் விட்டுச் சிரிப்பது, அதுவும் இன்றைய உலகில்? கீழ்ப்பாக்கம் சென்றால் சாத்தியமாகலாம்.

அது குழந்தைகளிடம் மட்டுமே அது சாத்தியம்.

அதற்கு அவர்கள் மனம் வேண்டும், நாம் வளர்க்கும் கல் நெஞ்சம் வேலைக்கு ஆகாது. ஆள் அரவமற்ற ஒரு அழகிய பூங்காவில் இருக்கும், பெறும் சுகத்தை ஒரு குழந்தை அருகிலிருக்கப் பெறலாம். பேசும், கொஞ்சும் இயற்கையது.

இதையெல்லாம் உணர்ந்திருப்பார் நேரு. வெள்ளையனில் ஆரம்பித்து கடின நெஞ்சர்கள் எத்தனைப் பேரைப் பார்த்திருப்பார்? எல்லைக்கு உள்ளும், அதற்கு அப்பாலும்? நல்ல மனதை தேடியிருப்பார், காந்தியும் 1948இல் கொல்லப்படவே, அன்பு நெஞ்சத்தை மிகவும் தேடியிருப்பார், எங்கும் கிடைத்திருக்காது. குழைந்தைகளிடம் கண்டிருப்பார். அவர்களிடமிருந்து தன்னை இழந்து இன்பம் பெறும் வித்தையை கற்றிருப்பார்.

நவ பாரதத்தை உருவாக்க நினைத்த சி்ற்பிக்கு, சிறு குழந்தையின் உலகிற்குள்தான் சுகம் கிடைத்துள்ளது. நாமும் அதனை இழந்திடாமல் அனுபவிப்போம்.
இன்று நேருவின் பிறந்த நாள். ஐ.நா.வால் 1953ஆம் ஆண்டு முதல் குழந்தைகள் நல நாளாய் கொண்டாடப்பட்டு வரும் இனிய நாள்.

கைதுறப்பு