Welcome, Guest   [ Register | Sign In | Take a tour | Adult Filter: On ]

காவடி கட்டுறல்ல... ஒருபொழுது இருக்கனும்!

பறவைகளின் பாடல்களால் கண்விழித்தேன். ஆட்டுக்குட்டி துள்ளிக் குதித்து உற்சாகமூட்டியது. அன்று வைகாசி விசாகம். எங்கள் ஊர் அய்யனாருக்கு (மெய்க்கய்யனார் என்றும் அழைப்பார்கள்) காவடி எடுத்து விழா கொண்டாடுவது வழக்கம். சித்தாப்பாக்களும், அத்தைமார்களும் காவடியை கழுவி துடைத்து மாவிலைக் கட்டி அலங்கரித்தார்கள். அன்று எங்களுக்கு சோர் தண்ணி கிடையாது.

காவடி கட்டுறல்ல... ஒருபொழுது இருக்கனும். கோயிலுக்கு போய் வந்ததும் சாப்பாடு என்றாள் அத்தை ஒருத்தி.

அழகிய சிறிய சொம்புகள். காவடியோடு இணைத்துக் கட்டுவதற்கென்றே வாங்கி வரப்பட்டவை. அதில் பால் ஊற்றி, மூடி, அதன் மீது துணி கட்டி, பிறகு காவடியின் இரு பக்கத்திலும் கட்டினார் பாப்பு சித்தப்பா (இயற்பெயர் சுப்ரமணியத் தேவர்). சில காவடிகளில் பன்னீர் நிரப்பப்பட்ட சொம்புகளைக் கட்டினர். அது பன்னீர் காவடி.
அய்யனார் கோயிலில் பாட்டுப் போட ஆரம்பித்தார்கள். பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்பக் காவடியாம், சந்தனக் காவடி, வேல் காவடி, தேர்க் காவடியாம்... என்று கே.பி. சுந்தராம்பாளின் வெங்கலக் குரல் ஊரை பக்தியால் நிரப்பியது. இடையிடையே டம் டம் என்று வேட்டுச் சத்தம் வேறு.

மதியம் 3 மணி காவடிகள் ஊர் எல்லையில் உள்ள அய்யனார் கோயிலிற்கு புறப்பட ஆரம்பித்தன. வடக்குத் தெருவில் வசிப்போரெல்லாம் (எங்களின் தெற்குத் தெருக்காரர்களின் உறவு முறையினர்) ஒன்றிணைந்து காவடி எடுத்துப் புறப்பட்டதை துந்துபி முழக்கமும், பறையும் தெரிவித்தன. தீடீரென்று உடலில் ஏதோ பரவுவதுபோல... அது என்ன உற்சாகமா? சந்தோஷமா? பக்தியா? இப்போது நினைத்துப் பார்த்தாலும் புரியவில்லை.

சித்தப்பா நாம எப்போ போறது? என்று கேட்டேன். நம்ம காவடியெல்லாம் வரும்... அப்ப போவம் என்றார்.

வந்தன தெற்குத் தெரு காவடிகள். என் காவடி சற்றுச் சிறியதாக இருந்தாலும் கனத்தது. வலிக்குது என்றேன். அதனை பிடித்துக்கொண்டிருந்த சித்தப்பா காவடியை வாங்கி தன் தோளில் வைத்துக்கொண்டார்.

எங்கள் ஊர் சாமியான அய்யனாருக்கு (இவர் ஐயப்பன் அல்ல) இரண்டு பெண்டாட்டிகள் (எங்களுடைய தாத்தாக்கள் பலருக்கும் இரண்டு பெண்டாட்டிகள்தான்). அய்யனார் கோயிலிற்கு முன்னால் ஒரு குளம் இருக்கும். ஊரிலிருந்து 1 கி.மீ. தூரத்தில் கோயில் உள்ளது. தாரை, தப்பட்டை, பறையோடு துந்துபி முழங்கிட முருகனுக்கு அரோகரா, அய்யனுக்கு அரோகரா என்று முழங்கிக்கொண்டு கோயிலிற்கு வந்து சேர்ந்தோம்.

எங்கள் ஊர் அய்யனாருக்கு அக்கம் பக்கத்து ஊர் மக்களெல்லாம் கூட காவடியெடுத்து வருவார்கள். மிகச் சக்தி வாய்ந்த கடவுளாகத் திகழ்பவர். ஆண் பிள்ளை வரம் வேண்டியவர்களுக்கெல்லாம் அந்த வரத்தை வழங்கியவர். அவ்வாறு வேண்டி ஆண் பிள்ளை பெற்றவர்கள் அய்யனாருக்கு குதிரை கட்டி விடுவார்கள். இப்படிக் கட்டி விடப்பட்ட குதிரைகள் கோயிலை சுற்றி ஏராளமான சிதைந்தும், நிறம் மாறியும் இன்றுவரை நின்றுகொண்டிருக்கின்றன. நான் பிறந்ததற்காக என் குடும்பமும் குதிரை கட்டிவிடவேண்டிய நேர்த்திக் கடன் இன்றளவும் நிலுவையில் உள்ளது (அத சீக்கிரம் செஞ்சி முடிச்சிடுங்கப்பா என்று அம்மா சமீபத்தில் கூட என்னிடமும், தம்பியிடமும் கூறினார்கள்). அந்த அளவிற்கு சக்திவாய்ந்தவர் அய்யனார். எனவே கோயில் பக்தர்களால் நிரம்பி வழியும்.

காவடியில் கொண்டு சென்ற பால், பன்னிரைக் கொண்டு அபிடேகம் செய்து, அதன் ஒரு பகுதியை பிரசாதமாக அளித்தார்கள். அரிசி மாவில் பிசைந்து செய்த மாவிளக்கில் எண்ணெயூற்றி அய்யனாருக்கு படையல் செய்து கொண்டுவந்து எல்லோருக்கும் அளித்தார் சின்னம்மா சாரதா. நெற்றி நிறைய பட்டையடித்தார் சித்தப்பா. என்னைப் பார்த்து திருப்தியுடன் சிரித்தார். வீட்டிற்குத் திரும்பினோம்.

சின்னாயி சோரு போட்டார்கள். முருங்கை, கத்தரிக்காய் போட்டு சாம்பார். வயிற்றைப் பிசைந்த பசி, அப்பா வேகத்திற்கு உள்ளே தள்ளினேன். அருகிலிருந்து தலையைத் தட்டி தண்ணீர் கொடுத்து வயிறார பசியாற்றினாள் சின்னாயி.

(வடசேரி முருங்கைகாய்க்கு தனிச் சுவை உண்டு. அதனால் அதற்கு சந்தையில் (எங்க ஊரில் வியாழன் சந்தை) அதற்கு நல்ல மதிப்பு உண்டு. எங்க ஊர் முருங்கைகாயைப் போட்டு வைத்த சாம்பாருக்கும் சரி, குழம்பிற்கும் சரி தனி சுவையிருக்கும். ஒரு குத்து சோறு சேர்த்து இறங்கும்).

காவடி எடுத்துச் சென்றது, ஒருபொழுது இருந்தது என்று களைப்பாக இருந்ததால் சோறு சாப்பிட்ட சிறிது நேரத்தில் தூங்கிவிட்டேன். இரவு அய்யனார் ஊருக்குள் வலம் வந்ததைக் காண முடியவில்லை.

மறுநாள் மேலும் ஒரு ஆனந்த நாளாகக் கழிந்தது. சித்தப்பன் சண்முகம், முருகையனுடன் இரவுவரை ஓயாத விளையாட்டு. களைத்துத் தூங்கிவிட்டேன். அதிகாலை அப்பா எழுப்பினார். ஊருக்குப் புறப்படனும் எழுந்திரு என்றார். பாப்பு சித்தப்பா வண்டிக்கட்டிக்கொண்டிருந்தார். புறப்படுங்க நேரமாச்சி என்று அதட்டிக்கொண்டிருந்தார்.

வீட்டிலிருந்து புறப்பட்டு சிறிது தூரம் சென்றவுடன், எனது அம்மா வீட்டுத் தாத்தா மெய்க்கப்பத் தேவரிடம் பயணத்தைக் கூறிவிட்டு வந்தார் அப்பா. அம்மாவும் பேசிவிட்டு வந்தாள்.

3 மைல் தூரம் மாட்டுவண்டியில் பயணித்து உள்ளிக்கோட்டைக்கு வந்து சேர்ந்தோம். அதிகாலை 5.30 மணிக்கு பேருந்து புறப்பட்டது. 3 மணி நேர பயணத்திற்குப் பின் கும்பகோணம் வந்து சேர்ந்தோம்.

இரயில் நிலையத்தில் காத்திருந்தபோது எல்லாவற்றையும் இழந்துவிட்டது போன்று அமைதியாயிருந்தேன். மாலை இரயிலேறி மறுநாள் அதிகாலை சென்னை வந்து சேர்ந்தோம்.

அம்மாவும் அப்பாவும், குளத்துக்கடைத் தாத்தாவும் ஒரு ஆனந்தமான பூமியில் இருந்து என்னை வலுக்கட்டாயமாக இழுத்துக்கொண்டு வந்துவிட்டது போலிருந்தது.

45 ஆண்டுகளைக் கடந்தப் பின்னரும் அந்த சில நாட்கள் இன்னமும் எனது மனதில் நீங்காமல் நிலைத்து வாழ்ந்துக்கொண்டிருக்கின்றன.

மறுமொழிகள்

Re: காவடி கட்டுறல்ல... ஒருபொழுது இருக்கனும்!
wow..super Ayyanathan.. I realy enjoyed... I am also from kumbakonam.. Its great experience...Evergreen memories... Sathish_D
கைதுறப்பு