Welcome, Guest   [ Register | Sign In | Take a tour | Adult Filter: On ]

என்னுள் வாழும் ஆனந்த நாட்கள்!

அப்பொழுது 7, 8 வயதிற்கும் எனக்கு. அப்பா, அம்மாவுடன் எங்களது சொந்த ஊருக்குச் சென்றிருந்தேன். அப்பொழுதெல்லாம் இரவு சென்னையிலிருந்து இரயிலில் புறப்பட்டு கும்பகோணத்திற்குச் சென்று அங்கிருந்து பேருந்தில் பயணம் செய்து மன்னார்குடி சென்று, பிறகு வடசேரிக்குப் போக வேண்டும்.

தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு ஒன்றியத்திலுள்ள வடசேரி கிராமம் எங்களது சொந்த ஊர். எனது பொற்றோருக்கு நான்காவது பிள்ளையான நான் பிறந்தது இந்த வடசேரியில்தான்.
உண்மையான சிக்கு புக்கு இரயில். நிலக்கரி எஞ்சின் 12 பெட்டிகளை எழுப்பூரிலிருந்து இழுத்துக் கொண்டு மூச்சிரைக்க ஓடி மறுநாள் காலை கும்பகோணத்தில் சென்று நிற்கும். இரயில் எஞ்சினை சன்னல் வழியாக எட்டி பார்த்து ரசித்ததால் எஞ்சினை ஏதோ நான்தான் ஓட்டிக்கொண்டு வந்ததுபோல முகமெல்லாம் கரியாய், கரித்தூள் விழுந்து சிவந்த கண்ணனாய் கும்பகோணத்தில் இறங்கினேன்.

எல்லோரும் முகத்தைக் கழுவிக்கொண்டார்கள். என் முகத்தை அம்மா கழுவினாள். கழகழவென்று கரித்துகள்கள் கரைந்து முகம் வெளுத்தது. அருகிலிருந்த சிற்றுண்டி சாலையில் காலை உணவு. அப்பா எப்போதும் போல வேகமாகச் சாப்பிட்டார். அவர் எப்போதும் அப்படித்தான் சாப்பிடுவார். இலையில் கொட்டிய சோற்றிலிருந்து ஆவி பறக்கும். ஊத்துக் குழம்பை என்று கூறி, பிசைந்து மள மளவென்று முதல் சாப்பாட்டை முடித்துவிடுவார், நான் அப்போழுதான் ஆறவைத்து குழம்பு ஊற்றுமாறு கேட்பேன். அப்பா முறைப்பார்.

சாப்பாடு முடிந்ததும் அங்கிருந்து ஒரு குதிரை வண்டியில் எல்லாவற்றையும் ஏற்றிக்கொண்டு பேருந்து நிலையத்திற்குப் புறப்பட்டோம். இப்போது போலல்ல அந்த நாள் பயணம். ஊருக்குச் செல்வதென்றால் சித்தப்பா, பெரியப்பா வீடுகளுக்கு ஏதாவது வாங்கிச் சென்று கொடுப்பது வழக்கம். சென்னை மாநகரில் எனது தந்தை கடை வைத்து வியாபாரம் செய்து வந்ததால் நிறைய சாக்குப் பைகளை கட்டிக்கொண்டு வந்தார். நெல் அறுவடை செய்தபின் கொண்டுவந்து சேர்ப்பதற்கு இது நன்கு பயன்படும். சாக்குபைகள் சிலவற்றில் பட்டாணி, உப்புக்கடலை என்று படிப்படியாய் (பழைய அளவுகள்) கட்டிக் கொண்டு செல்வோம். இவைகள் மட்டுமின்றி, தஞ்சாவூரில் கிடைக்காதது என்று ஏதாவது இருந்தால் அதனை சென்னையிலிருந்து வாங்கிச் சென்று கிராமத்தில் வாழும் உடன்பிறந்தான் குடும்பத்திற்கு கொடுப்பார்கள்.

கொண்டு செல்லும் அனைத்தும் அக்கரையுடனும், அன்புடனும், நன்கு பயன்பட வேண்டுமே என்ற ஆவலுடனும் வாங்கியதாக இருக்கும். எனவே, குதிரை வண்டியில் ஏற்றப்பட்டவை பொருட்களாகவும், கூட என்னைப் போன்ற சிறுவர் சிறுமிகளும், அதையும் தாண்டி இடமிருந்தால் அம்மாவோ அத்தையோ உட்காருவார்கள்.

அந்நாட்களில் கும்பகோணம் வீதியில் குதிரை வண்டிப் பயணம் ஒரு தனித்த அனுபவம். நிறைய பாத்திரக்கடைகள் இருக்கும், அதிகாலையிலேயே சுறுசுறுப்பாக இயங்கத் துவங்கிவிடும் நகரமது. கொஞ்ச தூரத்தில்தான் பேருந்து நிலையம்.

மூட்டை முடிச்சுகளுடன் போருந்துப் பயணம். சன்னலோரம் அடம்பிடித்து உட்கார்ந்து கொண்டேன். இரண்டு பக்கமும் வயல் வெளிகள், வெயிலிற்கிடையேயும் குளிர்ந்த காற்று. தஞ்சை தரணிக்கே உரிய வளைந்து வளைந்து செல்லும் சாலை. சாலையோர வீடுகளில் ஆட்டுக் குட்டிகள் துள்ளல் விளையாட்டு, குஞ்சுகளுடன் கோழிகளின் குடுப்பப் பவணி, எட்ட நோக்கின் எங்கு காணின் பசுமை, சாலையோரத்தில் சளைக்காமல் சலசலத்து ஓடும் வாய்க்கால்கள்.

4 மணி நேர பயணத்திற்குப் பின்... ஊர் வந்திடுச்சு எந்திரிங்க.. என்று பேருந்திற்குள் பெரிசுகளின் குரல். வந்து நின்றது பேருந்து. பாப்பு (அதுதான் அவருடைய செல்லப்பெயர்) சித்தப்பா காத்திருந்தார். மூட்டை முடிச்சுகளை வாங்கி இறக்கினார். ஊருக்குள் வெய்யில் கொளுத்தியது. சித்தப்பா வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தோம். அப்பாவிற்கு வழியேர விசாரிப்புக்கள். பிறகு வந்து பார்க்கிறேன் என்று சொல்லிக்கோண்டே சுருக்கமாக பேசிவிட்டு நடந்து வந்தார். முன்னால் வேகமாக ஓடிய நான், மண்ணின் சூட்டைத் தாங்காமல் அழுதேன், உடனே அத்தை இடிப்பில் இடம் கிடைத்தது.

வீடு வந்து சேர்ந்தோம். எங்கள் ஊரின் தெற்குத் தெருவில் இருந்தது சித்தப்பா வசித்த எங்கள் வீடு. மதாச்சி வீடு என்பது எங்களது பரம்பரையினருக்கு பெயர். எங்கள் ஊரில் ஒவ்வொரு வீட்டினருக்கும் இப்படியொரு தனி்ப்பெயர் உண்டு. எனது தாயார் தொளியன் வீட்டில் பிறந்தவர். எனது அப்பாவின் அம்மா புண்ணியன் வீட்டில் பிறந்து மதாச்சி வீட்டில் வாழ்க்கைப்பட்டவர். இதே புண்ணியன் வீட்டில் பிறந்தவளைத்தான் எனக்கு மணமுடித்து வைத்துள்ளார்கள்.

எனது தாத்தா சிதம்பரத் தேவருக்கு மூன்று சகோதரர்கள். இவர்கள் நால்வருமே வரிசையாக குடிசைகளைக் கட்டிக்கொண்டு ஒரே இடத்தில் வாழ்ந்துவந்தனர். அவர்களுடைய பிள்ளைகளும் (சென்னைக்குப் பிழைக்கச் சென்றவர்கள் போக மற்றவர்கள்) அதே வீடுகளில்தான் வாழ்ந்து வந்தனர். அக்கம்பக்கத்திலுள்ள வீடுகளில் எனது தாத்தாவின் சித்தப்பா, பெரியப்பா பிள்ளைகளே. இவர்களுக்குள் இளையவர்களாக இருந்த தாத்தாக்களுக்குப் பிறந்த பிள்ளைகளில் கடைக்குட்டிகள் எல்லாம் என் வயதை ஒத்தவர்கள். அதாவது எனக்கு என் வயதில் சித்தப்பன்கள். நாங்களெல்லாம் ஒன்றாகவே விளையாடுவோம். டேய் சித்தப்பா என்று நான் சில வேளைகளில் அவர்களை அழைக்கும்போது எனது தாத்தாக்கள் சிரிக்கக் கேட்டிருக்கிறேன். அம்மா மட்டும் திட்டுவாள்.
எனது தாத்தன்களுக்குப் பிறந்த பெண் பிள்ளைகளெல்லாம் எனக்கு அத்தைகள். அதில் சிலர் என்னைவிட ஒரிரண்டு வயதே பெரியவர்கள்! கொஞ்சிக்கொண்டிருக்க என்னை கொத்திக்கொண்டு போய் விடுவார்கள்.

அவர்களுக்குள் வறுமையும் இருந்தது. கூழ். பழங்கஞ்சி என்றுதான் குடிப்பார்கள். எனக்கு மட்டுமே இட்டிலி. மத்தியானம் சுடச்சோறு. அவர்கள் கஞ்சி, கூழ்தான்.
வைகாசி விசாகத்திற்காக ஊருக்குப் போய் போயிருந்தோம். ஊருக்கு வந்த மறுநாள் காலை நான் துயிலெழுந்து பார்த்தபோது வீட்டில் ஒருவரும் இல்லை. எல்லோரும் கொல்லைக்கு (வயலிற்கு) போய்விட்டனர். பிறகு என்னை அழைத்துக்கொண்டு போனார்கள். அம்மா, சின்னம்மா, அத்தை என்று பெண்கள் அனைவரும் கடலைக்கு நீர் பாய்ச்சிக்கொண்டிருந்தனர். பாப்பு சித்தப்பா கிணற்றிலிருந்து (அப்பொழுதெல்லாம் கேணியில் நீர் நிறைந்திருந்த காலம்) தண்ணீர் இரைத்துக்கொண்டிருந்தார். இத்தனைபேரும் சேர்ந்து உழைத்தால்தான் 10 ஏக்கர் நிலத்திற்கும் சூரியன் உச்சிக்கு வருவதற்குள் நீர்பாய்ச்ச முடியும்.
வரப்போரம் இருந்த மர நிழலில் என்னை ஒரு துணியை பரப்பி உட்கார வைத்து, அருகிலிருந்த வேலியின் ஒரு அங்கமாக இருந்த எலந்த மரத்திலிருந்து சில எலந்தம் பழங்களை பறித்துபோட்டுவிட்டு தங்கள் வேலையைத் தொடர்ந்தனர்.
உச்சி வெயில் நேரம் வேலை முடிய என்னையும் தூக்கிக்கொண்டு எல்லோரும் வீடு வந்து சேர்ந்தனர். கஞ்சி குடித்தனர். எனக்குச் சோறு ஊட்டினர். பெண்கள் தனியாகவும், அப்பா, சித்தப்பா, தாத்தாக்கள் தனியாகவும் பேசிக்கொண்டிருந்தனர். அவர்களுடன் மிக உயரமாக இருந்த குளத்துக்கடை தாத்தாவும் ஒருவர்.

நான் எனது சித்தப்பா பையன்களுடன் விளையாடினேன். உருண்டு புரண்டு சண்டையிட்டு, யார் ஜெயிக்கிறார் பார்க்கலாமா? என்ற விளையாட்டு. இடையிடையே பெரியவர்களின் அதட்டல். பிறகு, சாப்பிட்டுவிட்டுப் போட்ட இரண்டு நுங்குகளை சக்கரமாக வைத்து ஒரு குச்சியில் குத்தி இணைத்து அதனை ஒரு பனை ஓலையைக் கொண்டு கோவணம் போல மடக்கிக் கட்டி, அதனை ஒரு கழியில் சேர்த்துப் பிணைத்து டிர்்ர்ர்ர் ரென்று கத்திக்கொண்டு வேகமாக ஓட்டிச் சென்று விளையாடினோம்.

கொல்லையில் இருந்து கோவணத்துடன் சின்ன தாத்தா (மெய்க்கப்பத் தேவர்) வந்தார். வேட்டியே தலைப்பாகையாக இருந்தது. கையில் கிழங்குகளுடன் வந்தவர், ஏட்டியேய் என்று கூவ, ஆயா அவரிடம் இருந்த கிழங்கை வாங்கி அவிப்பதற்குச் சென்றாள்.

நாங்கள் எங்கள் விளையாட்டைத் தொடர்ந்தோம். எல.. பார்த்து... பார்த்து என்று கத்தினார். என்ன தாத்தா என்றேன். கழியை பார்த்து பிடி, புடுக்குல குத்திடப்போவுது என்றார்.. புரியலை.. கூட இருந்த சித்தப்பன்கள் புரிய வைத்தனர்.
மாலைச் சூரியன் மங்க, தெருவோர மரங்களில் பறவைகள் கத்திக்கொண்டு வந்தமர, கோழிகள் தங்கள் குஞ்சுகளுடன் அடைய வீட்டை அண்டின. சித்தப்பா மாடுகளுக்கு தண்ணீர் காட்டினார். சின்னச் சின்ன வேலைகளை அம்மாவும், அத்தையும், சின்னம்மாவும் செய்தனர்.

சிறிது நேரத்தில் காஃபி வந்தது. எங்களுக்கு சின்ன ஆயா வேகவைத்த சக்கரவள்ளி கிழங்கை கொண்டுவந்தார். மிகச் சூடாக இருந்த அவைகளை ஊதி ஊதி, தோலை உரித்து உண்பதற்கு அளித்தார் சின்ன தாத்தா. மாலைப்பொழுது சுவையானதானது.
வீட்டிற்கு வெளியே தெருவிலேயே கட்டிலைப் போட்டுக்கொண்டு பெரியவர்கள் பேசிக்கொண்டிருக்க நாங்களும் தெரு விளக்கு ஒளியில் ஓடியாடி களைப்புற்றோம். இரவு உணவு கொடுத்ததுதான் தாமதம், மெல்லிய தென்றலில் தூக்கம் அள்ளிக்கொண்டு போனது.

நாளை தொடரும்....

கைதுறப்பு